• June 7, 2025

திருமண தடை நீக்கும்  தலம்-மாகாளநாதர் கோவில்

 திருமண தடை நீக்கும்  தலம்-மாகாளநாதர் கோவில்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 55-வது தலமாக இருப்பது அம்பர் மாகாளம். தற்போது இத்தலம் மக்கள் பேச்சு வழக்கில் கோயில் திருமாளம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது; ஆதலின் இது “மாகாளம்” எனப்பட்டது. சோமாசி மாற நாயனார்  யாகம் செய்த பதி. திருமணத் தடை நீக்கும் பல பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அம்பர் மாகாளமும் ஒரு திருமணத் தடை நீக்கும் தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது. இறைவன் பெயர்: மாகாளநாதர், காளகண்டேஸ்வரர். இறைவி பெயர்: பக்ஷயாம்பிகை, ராஜமாதங்கி, ஐயம்மா தேவி

மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது.  பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

மயிலாடுதுறை- – திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் வந்து அங்கிருந்து கடைவீதியருகே காரைக்கால் எனும் கைகாட்டி காட்டும் சாலையில், ரெயில்வே கேட்டைத்தாண்டி 4 கி.மீ வந்தால் இத்தலத்தை அடையலாம். சாலையோரத்தில் கோவில் உள்ளது. கோவி ல் வரை வாகனங்கள் செல்லும்.

அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம்,இந்த மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு மாகாளநாதர் திருக்கோயில் அம்பர் மாகாளம், பூந்தோட்டம் அஞ்சல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609 503.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன.  அவை, வடஇந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.

புராண வரலாறு

மதங்க மகரிஷி தனக்கு புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை நீண்ட காலம் வழிபட்டார். இறைவன் அருளால் பிறந்த பெண் குழந்தைக்கு ராஜமாதங்கி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். உரிய பருவம் வந்ததும், இவ்வாலயத்தில் உள்ள இறைவனுக்கு அவளை மணமுடித்து வைத்தார்.

திருமணக் கோலத்தில் வீற்றிருக்கும்போது, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று ராஜமாதங்கியிடம் இறைவன் கேட்கிறார்.  அதற்கு ராஜமாதங்கி, இத்தலம் வந்து நம் இருவரையும் வழிபடும் திருமணமாகாத ஆண், பெண் இருபாலாருக்கும் திருமணம் விரைவில் நடைபெற அருள் செய்ய வேண்டும் என்ற வரம் கேட்டுப் பெற்றாள்.  எனவே. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி அர்ச்சனை

செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்துக்கு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசியார் தான் நடத்தும் யாகத்துக்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்துக்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால், நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது.

சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்திய சோமயாகத்துக்கு இறைவன் பறையன் உருவில் நேரில் எழுந்தருளினார்.இறைவன் நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக்கொண்டு தம்பட்டம்,இறந்த கன்று ஆகியவற்றை சுமந்துகொண்டும் இறைவி மதுக்குடத்தை ஏந்திக்கொண்டும் விநாயகர் முருகன் இருவரும் குழந்தை வடிவில் இறைவனின்

கையை பிடித்துக் கொண்டும் எழுந்தருளினார். அவர் வருவதைப் பார்த்த அந்தணர்கள், பறையன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று

கூறி ஓடிவிடுகின்றனர். தந்தைதான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார்.  ஆகையால், வந்திருப்பது இறைவன் என்று தெரிந்துகொண்ட சோமாசிமாற நாயனார், தனது மனைவியுடன் பறையர் தம்பதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்.

இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார்.  சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே “காட்சிகொடுத்த நாயகர்” எனப் போற்றப்படுகின்றார்.

இறைவன் யாகத்திற்கு பறையர் வடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘ நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்குகின்றது.

சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கும் அம்பர் பெருந் திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது.  அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது. இன்று அந்த இடம் “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது

மறுநாள் மக நாளில் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்து அருளினார்.  சோமாசிமாற நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்று அழைக்கின்றனர். வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப் பெருவிழா நடக்கிறது.

இந்த விழாவில்  காலில் செருப்பு,  கையில் மத்தளம்,  அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு. திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழாவுக்கு எழுந்தருள்வதால், அன்றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது. புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தேவேந்திரன் தோற்று இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார். அதனால், இத்தலத்துக்கு இந்திரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது.

சட்டைநாதருக்கு இத்தலத்தில் முதல் சுற்றில் தனி சந்நிதி உள்ளது. மன்மதன், தேவர்களால் ஏவப்பட்டு, விஸ்வாமித்தர முனிவரின் தவத்தைக் கலைக்க அவர் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அதனால் சினம் கொண்ட முனிவர், இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப் பெற்றது.

அஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது.  நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள்  வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம்.

அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சாலையோரமாக சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது. ஆண்டுதோறும்

வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறுகிறது. இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர்.  இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மணக்கோலத்தைக் காட்டியருளிய தலம்.

அம்பரனை அம்பாள் வதம் செய்ததும் இத்தலத்தில்தான். கருங்காலி மரம் தலவிருட்சமாகும்.  இறைவன், இறைவி இருவரும் பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர். சோமாசிமாற நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன.

தொகுப்பு: காசி விஸ்வநாதன், திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *