தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

 தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சேரைக்குளம் இழுப்பைகுளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் காசிராஜன் (வயது 29). இவர் செய்துங்கநல்லூரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தனக்கு பணம் தேவைப்படுவதாக அந்த நிதி நிறுவன மேலாளர் விமல் பொன்சிங்கிடம் கூறினார்.

இதனால் விமல் பொன்சிங் பாளையங்கோட்டையில் உள்ள மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளரான சாமிகண்ணு என்பவரிடம் பேசி, காசிராஜனை அங்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து காசிராஜன் கடந்த மே மாதம் சாமிகண்ணுவை சந்தித்து, நான் விமல் பொன்சிங் நிறுவனத்தில் அடகு வைத்த  நகைகளை திருப்ப வேண்டும். அதற்கு ரூ.10 லட்சம் கொடுங்கள். அந்த நகையை திருப்பி உங்கள் நிதி நிறுவனத்தில் மறுஅடகு வைத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய சாமிகண்ணு ரூ.10 லட்சத்தை காசிராஜனின் வங்கி கணக்குக்கு அனுப்பினார். தொடர்ந்து கடந்த 19.5.2023 அன்று காசிராஜன் சுமார் 256 கிராம் தங்க நகைகளை சாமிகண்ணு நிதி நிறுவனத்தில் மறுஅடகு வைத்தார். அங்கு நகைகளை சோதனை செய்தபோது அவை போலி நகைகள் என்பது தெரியவந்தது. இதனால் சாமிகண்ணு தான் கொடுத்த பணத்தை காசிராஜனிடம் திருப்பி கேட்டார். ஆனால் அவர் கொடுக்கவில்லை.

இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காசிராஜன், விமல் பொன்சிங் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் காசிராஜனை நேற்று கைது செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *