மண்ணில் புதைந்த 3 தொழிலாளர்கள் மீட்பு; தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு

தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் எதிரே ஐஓசிஎல் (IOCL) குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று இந்த குழாய் பதிக்கும் பணியில் உத்திரபிரதேசம் பாட்வாலியா ரோடி பகுதியை சேர்ந்த அசோக் சர்மா மகன் ஓம் பிரசாத் (வயது 26), பீகார் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர்களான ஹரிராம் நாத் ஷா மகன் ஹரிராம் பிரசாத் (38), கட்டிவன் ஷா மகன் பிரசாத் (29) மற்றும் பீகாரை சேர்ந்த வக்கீல்கிரி மகன் ரிக்தேஷ் (25) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பெய்த மழையின் காரணமாக அந்த குழி இடிந்து விழுந்தது. இதில் மேற்படி 4 பேரும் குழிக்குள் சிக்கி புதையுண்டனர். அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட எஸ்.பி தனிப்படையை சேர்ந்த போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சுடலைமணி சண்முகையா கதிரவன் டேவிட் ராஜன் மற்றும் சக்தி மாரிமுத்து ஆகியோர் உடனடியாக அந்த குழிக்குள் இறங்கி சரிந்த மண்னை தோண்டி அகற்றி, அதில் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழிக்குள் மண்ணில் புதைந்து உயிருக்கு போராடிய 4 பேரை மனிதநேயத்துடன் காப்பாற்றி உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இதையறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக சம்பவ இடம் வந்து பார்வையிட்டதுடன் 4 பேர் உயிர்களை காப்பாற்றிய தனிப்படை போலீசாரை வெகுவாக பாராட்டினார்.
