தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பணி, நிறைய அனுபவங்களை கற்றுத்தந்தது; கோவில்பட்டி கூட்டத்தில் செந்தில்ராஜ் பேச்சு

கோவில்பட்டியில் உள்ள எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் இலக்கியம், கலை மற்றும் இசை சங்க கூட்டம் நடைபெற்றது. இடமாறுதல் ஆகி செல்லும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமை தாங்கி பேசியதாவது:-
இடமாறுதல் என்பது அரசு பணியில் இயல்பாக நடக்கக்கூடியதுதான். நான் எங்கு இடமாறுதல் பெற்று சென்றாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்காகத்தான் ஒரு குழுவாக வேலை செய்ய போகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த 3 ஆண்டுகள் எனக்கு நிறைய அனுபவங்களை கற்றுத்தந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் , தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்பரிந்துரையின்பேரில் கி.ராஜநாராயணனுக்கு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தவுடன் கரிசல் இலக்கியத்தின் தலைநகராக இருக்கக்கூடிய கோவில்பட்டியில்தான் அமைக்க வேண்டும் என்று உடனடியாக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இந்த நினைவரங்கம் தமிழ்நாட்டிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு முன்னுதாரணமான நினைவரங்கமாக திட்டமிட்டு அமைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நினைவகங்கள் இருக்கிறது. அதை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணிமண்டபங்கள், நினைவகங்கள், நூலகங்களை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்துவதற்காகத்தான் எழுத்தாளர்களை இணைத்து தூத்துக்குடி மாவட்ட இலக்கியம், கலை மற்றும் இசை சங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.
கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள நூலகத்தில் கூடுதல் புத்தகங்கள் மற்றும் படிப்பறை வசதிகள், கூடுதலாக கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கைகளை சங்கத்தில் உள்ள நிதியின் மூலம் நிறைவேற்றுவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடுத்த மாதம் நிறைவேற்றுவோம் என்று உத்தரவாதத்தை தருகிறேன். அந்த அளவுக்கு இந்த சங்கம் சார்பாக ஒவ்வொரு 3 மாதமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், கூடுதல் ஆட்சியர், எழுத்தாளர்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தி கி.ராஜநாராயணன் நினைவரங்கம் மட்டுமல்லாமல் வீரபாண்டிய கட்டப்பொம்மன் மணிமண்பம், மகாகவி பாரதியார் மணிமண்டபம் உள்ளிட்ட அனைத்து மண்டபங்களையும் ஒருங்கிணைத்து மேம்படுத்த இருக்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 புத்தக திருவிழாக்களை நடத்திய பெருமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல் அவருக்கு பின்னால் இருந்து செயல்பட்ட எழுத்தாளர்களையும் சேரும். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்க பட்டயத்தை எடுத்ததோடு மட்டுமல்லாமல் 3600 ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் வாழ்ந்த சுவடுகளான நெல்மணிகளை கார்பன் பரிசோதனை செய்து அதனையும் புத்தக திருவிழாவில் காட்சிப்படுத்தியிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாகத்தான் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் முயற்சியால் ஒன்றிய நிதியமைச்சர் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். அப்போது அவரிடம், திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள அகழ்வாராய்ச்சி இடங்களான கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், வசவப்பபுரம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து வரலாற்று ஆய்வாளர்கள், சுற்றுலா பயணிகள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.
நாம் அனைவரும் குழுவாக ஒன்றிணைந்து பணியாற்றிய ஒரே காரணத்தினால்தான் இத்தனை நிகழ்வுகளையும் இந்த 3 வருடங்களில் சிறப்பாக செயல்படுத்த முடிந்திருக்கிறது. கோவில்பட்டி பத்திரிகையாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கோவில்பட்டி பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் பேருந்துகள் இயக்குவதற்கு பத்திரிகையாளர்கள்தான் காரணம். அதேபோல் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு கூடுதலான குடிநீர் திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.
ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் திட்ட குழாய்களில் உள்ள பழுதுகளை நீக்குவதற்கு ரூ.30 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிதியும் விரைவில் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இதுபோல் கோவில்பட்டி நகரத்தில் பல நல்ல செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட இலக்கியம், கலை மற்றும் இசை சங்கத்தின் மூலம் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் இன்னும் அதிகமான வசதிகள் செய்யப்பட உள்ளது. இனி வரும் காலங்களிலும் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும். நான் சென்னையில் இருந்தாலும் அதற்கு தேவையான ஒத்துழைப்பை நான் அளிப்பேன்.
இவ்வாறு ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சு.கஸ்தூரி, எழுத்தாளர்கள் சோ.தர்மன், முத்தாலங்குறிச்சி காமராசு, கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ், ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
