பள்ளிக்கூட வேன் உரசியதில் டிராக்டர் உருண்டது; பெண் உள்பட 2 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் எப்போதுவென்றான் அருகே உள்ள ஏ.வேலாயுதபுரம் கிராமத்தைச் சார்ந்த முத்துச்சாமி மகன் சந்தனமாடசாமி(வயது 32) சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். தனது டிராக்டரில் தனது தாய் ராஜேஸ்வரி(60), அதே ஊரை சேர்ந்த மாடசாமி மனைவி கோமதி(50), செல்வபாண்டி மனைவி சரஸ்வதி(60) ஆகியோருடன் மஞ்சநாயக்கன்பட்டி ஏ.வேலாயுதபுரம் விலக்கு அருகில் விவசாய பணி செய்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த எட்டயாபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் முந்தி செல்ல முயன்றது. இதில் டிராக்டரின் பக்கவாட்டில் பள்ளி வேன் உரசியது. இதில் நிலை தடுமாறி டிராக்டர் சாலை பக்கவாட்டில் உருண்டது. இதில் சந்தனமாடசாமி, கோமதி டிராக்டர் சிக்கி பரிதாபமாக உடல் நசங்கி உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் ராஜேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரை காயங்களுடன் மீட்டுசிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எப்போதுவென்றான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த சந்தனமாடசாமி, கோமதி ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. இறந்துபோன சந்தனமாடசாமிக்கு முருகலட்சுமி என்ற மனைவியும் முகுந்த் என்ற 6 மாத குழந்தையும் உள்ளனர்.
