தி.மு.க.ஆட்சியில் திரைத்துறை முடக்கம்; கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, கோவில்பட்டி ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம்- மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ. பங்கேற்று, அப்துல் கலாம் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ரத்த தான முகாமை தொடக்கிவைத்தாா்.
டாக்டர் வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, ரத்த தானம் வழங்கிய 51 பேரை பாராட்டி மரக்கன்றுகளை வழங்கிய கடம்பூர் ராஜு, செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
நடிகா் விஜய்யை கண்டு தி.மு.க. பயப்படுகிறது. பல்வேறு காரணங்களை கூறி, அவரது லியோ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், ஜெயிலா் படத்துக்கு அனுமதி வழங்கினா்.
அ.தி.மு.க. ஆட்சியில் திரைத்துறை சுதந்திரமாக செயல்பட்டது. பாரபட்சமின்றி முன்னணி நடிகா்களின் படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இது முறையல்ல. தற்போது, திரைத்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு முடங்கி உள்ளதாக அத்துறையினா் கூறுகின்றனா். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிட முடியாத நிலை உள்ளது. இதற்கு அமைச்சரை உரிமையாளராக கொண்ட ரெட் ஜெயின்ட் மூவிஸின் தனி ஆதிக்கமே காரணம்.
இவ்வாறு கடம்பூர் ராஜு கூறினார்,
