மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்தகோரி கையெழுத்து இயக்கம்

கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவிலில் இருந்து கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையில் வீடுகள் அதிக அளவில் உருவாகி வருகின்றன. இதனால் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது;. அதே சமயம் வாகன போக்குவரத்து அதிகம் காரணமாக அடிக்கடி இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
மந்தி தோப்பு சாலை தொடக்க பகுதி மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி எட்டயபுரம் ரோடு சந்திப்பிலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே மங்கள விநாயகர் கோவில் அருகில் இருந்து மந்திதோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன/. மேலும் அதிகாரிகளுக்கு மனுக்களும் வழங்கபட்டு இருக்கிறது. ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்பவும் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தின் காரணமாகவும், மந்திதோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது.
மங்கள விநாயகர் கோவில் முன்பிருந்து புறப்பட்ட கையெழுத்து இயக்கத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். புனித ஓம் பள்ளியின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் முனைவர்.சம்பத்குமார், கலைச்செல்வம், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் முருகானந்தம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பொன்ஶ்ரீராம், மந்தித்தோப்பு ஊழல் எதிர்ப்பு இயக்கம் காந்திராஜ், ஜெய்பீம் அறக்கட்டளையின் தாவீது ராஜா,
ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாடசாமி, நகரசெயலாளர் கருப்பசாமி, வழக்கறிஞர் பாபு, இசைக்கலைஞர் பிரபாகரன் ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன், பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர். ரவிக்குமார், மருதம் மாரியப்பன், காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு அருள்தாஸ், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தலைவர் உத்தண்டராமன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் மந்திதோப்பு சாலையில் வசிப்பவர்கள் மற்றும் கடை வைத்திருப்போர்களை சந்தித்து கோரிக்கை மனுவில் கையெழுத்து வாங்கினார்கள். முதற்கட்டமாக 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தி முடிவில் அரசுக்கு அந்த கோரிக்கை மனுவை அனுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது.
