• June 7, 2025

தூத்துக்குடியில் ரூ.57 கோடியில் உருவான புதிய பேருந்து நிலையம் ; நாளை திறப்பு

 தூத்துக்குடியில் ரூ.57 கோடியில் உருவான   புதிய பேருந்து நிலையம் ; நாளை திறப்பு

தூத்துக்குடியில் ரூ.57 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நாளை நடைபெறுவதையொட்டி இறுதி கட்டப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று பார்வையிட்டார். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-

 தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் இருந்த போக்குவரத்து கழக பணிமனை ஆகிவற்றை அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2 ஆண்டில் வெறும் 10 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

இதனையடுத்து தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தனர்.  இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து சுமார் ரூ.57 கோடி மதிப்பில் 4 தளங்களாக பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

தரை தளத்தில் 20 கடைகளும், முதல் தளத்தில் 49 கடைகள், 2வது மற்றும் 3வது தளத்தில் 29 கடைகள் என சுமார் 120 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து உள்ளே வருவதற்கும் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்க வருகை தரும் கார், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கென்றும் 9 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் முழுவதும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் உள்ள சுற்றுச்சுவர்களில் மாவட்டத்தின் சிறப்புகளை குறிக்கும் வகையில் திருச்செந்தூர், குலசேகரபட்டினம் கோவில்கள், பனிமயமாதா பேராலயம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை போன்றவை வரையப்பட்டு வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் பொன்மொழிகளும் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் திறக்கப்பட்ட அன்றே இங்கிருந்தே அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். ஏற்கனவே பழைய பேருந்து நிலையமாக இருந்த போது, அண்ணா பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது. அதே போன்று ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் அதே போல் அம்பேத்கர்நகர் பகுதியில் 29 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்தில் எல்லோரும் பயன்பெறும் வகையில் பூங்கா விளையாட்டு கூடம் என புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் நாளை 8ம் தேதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி  தெரிவித்தார். 

ஆய்வின் போது செயற்பொறியாளார் பாஸ்கர், பொறியாளர் சரவணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *