கஞ்சா கடத்திய 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே கடந்த 28.8.2023 அன்று 2 கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில், தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனி ஆரோன் (வயது 31), தூத்துக்குடி பாரதி நகர் இசக்கி கணேஷ் (29), கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சரவணன் (45), தூத்துக்குடி அண்ணா நகர் மூக்காண்டி (எ) ராஜா (30), அருண்குமார் (27), காளீஸ்வரன் (24), விக்னேஷ்வரன் (29), திருமேனி (29), கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியை சேர்ந்த சஜின் ரெனி (35), தூத்துக்குடி வி.எம்.எஸ் நகர் திருமணிகுமரன் (27), சென்னை புனித தாமஸ் மவுண்ட் தயாளன் (45), சாத்தான்குளம் ஆசிர்வாதபுரம் மணிகண்டன் (39) சென்னை மயிலாப்பூர் சம்பத்குமார் (50) மற்றும் சிலரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சாவும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.. இவ்வழக்கின் எதிரிகளான ஆரோன், இசக்கி கணேஷ், சரவணன், மூக்காண்டி (எ) ராஜா, சஜின் ரெனி, திருமணிகுமரன், அருண்குமார், தயாளன், மணிகண்டன், காளீஸ்வரன், விக்னேஷ்வரன், திருமேனி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, ஆரோனை மதுரை மத்திய சிறையிலும், மற்ற 12 எதிரிகளை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 எதிரிகள் உட்பட 137 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.