கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் ; த. மா. கா. கோரிக்கை

கோவில்பட்டி நகர த. மா. கா. தலைவர் கே. பி.ராஜகோபால் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்.
இந்த குழுவில் வட்டாரத் தலைவர் கே பி ஆழ்வார் சாமி, மாவட்ட துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர செயலாளர் வின்சென்ட்,நகர துணைத் தலைவர் மணிமாறன், நகர துணை செயலாளர் ஜான்,வட்டாரத் துணைத் தலைவர் கண்ணன்,மாநில மாணவரணி செயலாளர் மாரிமுத்துராமலிங்கம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இவர்கள் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது :-
தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி.
1-4-1959ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் கோவில்பட்டி எட்டயபுரம் விளாத்திகுளம் கயத்தாறு ஓட்டப்பிடாரம் ஆகிய 5 தாலுகாக்களும், 400-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களும், 5 ஊராட்சி ஒன்றியங்களும், கோவில்பட்டி விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் என 3 சட்டப் பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் மதுரை ரெயில்வே கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான வருவாயை ஈட்டி தரக்கூடிய ரெயில் நிலையமாக கோவில்பட்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
கோவில்பட்டி,விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாது தென்காசி, சங்கரன்கோவில், திருவேங்கடம், ராஜபாளையம் உள்ளிட்ட அண்டை மாவட்ட மக்களுக்கும் வணிகர்களுக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்து கேந்திரமாக, கோவில்பட்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி வரை வருமானம் ஈட்டித் தருகிறது. இதன் காரணமாக கோவில்பட்டி ரெயில் நிலையம் ஏ கிரேடு அந்தஸ்தில் உள்ளது.
ஆகவே அதிக வருவாய் ஈட்டித்தருவதில் முன்னணியில் உள்ள கோவில்பட்டி ரெ யில் நிலையத்தில்
விரைவில் இயக்கப்பட உள்ள திருநெல்வேலி சென்னை வந்தே பாரத் ரெயிலை கோவில்பட்டியில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
