கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள்; ம.தி.மு.க. புகார்

கோவில்பட்டியில் இயக்கப்பட்டு வரும் பல மினி பஸ்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அப்போது நகர இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர துணை செயலாளர் லியோ செண்பகராஜ் , பொருளாளர் தம்பித்துரை, வார்டு செயலாளர்கள் சுந்தர்ராஜ், வேலாயுதம் ஆகியோர் உடனிருந்தனர்
புகார் மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மினி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறி இருக்கும் நிலையில் கோவில்பட்டி பகுதியில் இயக்கப்படும் மினி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமே 10 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஏழை ,எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் மினிபஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், மினி பஸ்களில் கட்டண விபரம் மற்றும் இயக்கப்படும் நேரம் குறித்து விவரங்களின் பட்டியலை வைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
