சாய்ந்த இரும்பு கம்பத்தை நிமிர்த்த நடவடிக்கை எப்போது?

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து சண்முகசிகாமணிநகரில் அம்மா பூங்கா அருகில் பஞ்சாயத்து அலுவலகத்தின் தேவைக்காக வைத்திருக்கும் இரும்பு கம்பம் திடீரென சாய்ந்து விழுந்து விடும் நிலையில் காணப்பட்டது.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் , ஆபத்தை உணர்ந்து சாய்ந்த இரும்பு கம்பத்துக்கு சவுக்கு கம்பு வைத்து முட்டுக் கொடுத்து மேலும் சாயாமல் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் இந்த கம்பத்தின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். அவர்களால் முடிந்த அளவு முட்டு கொடுத்து கம்பியால் இழுத்து கட்டிவிட்டு சென்று விட்டனர். ஆனால் கம்பத்தை நேராக நிமிர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அருகில் உள்ள பூங்காவுக்கு சிறுவர் சிறுமியர்கள் வந்து செல்லும் நிலையில் விபரீதம் எதுவும் நடப்பதற்கு முன்பாக முன் இந்த இரும்பு கம்பத்தை நேராக நிமிர்த்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
