மாசில்லா பசுமைவழி விநாயகர் சதுர்த்தி விழிப்புணர்வு பிரசாரம்

.
செப்டம்பர் 18ம் தேதி(இன்று) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த கோரியும்,விநாயகர் சிலைகளை களிமண், அரிசிமாவு,போன்ற இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு செய்திடவும், நீர் நிலைகளை சுத்தமாக வைத்திடவும், மாசில்லாமல் பசுமை வழியில் விநாயகரை வழிபட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் வேண்டி விழிப்புணர்வு ஊர்வலம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், பேருந்து நிலையம், ரெயில் நிலையம், கிருஷ்ணன் கோவில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இந்திராநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் ஆட்டோ வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தபட்டது. கோவில் பக்தர்களுக்கு துணிப்பை வழங்கியும்,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்திராநகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை தாங்கினார்.அரசு மகளிர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், மேனாள் தாய்கோ வங்கி மேலாளர் ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.கல்லூரி துணை முதல்வர் தமயந்தி, ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி,பள்ளி மாணவிகள் மாசில்லா பசுமை வழி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நகரின் முக்கிய பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் ரவீந்திரன்,செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி,ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன்,கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பசுமை படை ஆசிரியர் சுப்பிரமணியன், கே.ஆர் கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
