மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம்; தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி, கீதா ஜீவன் தொடங்கி வைத்தனர்

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டணம், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச்சந்திரன், நகராட்சி துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெற்ற அரசு விழாவில், தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் வட்டத்தைச் சார்ந்த மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் இன்று வழங்கினார்.
இவ்விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாநகராட்சி தெற்கு மண்டலத்தலைவர் பாலகுருசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், மாநகராட்சி 45ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர்கள் பலர் கலந்து கொண்டனர்.
