கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவிபத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளையை தடுத்ததால் அவரது அலுவலகத்திற்குள்ளேயே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் நியமனம் செய்யப்பட்டார். அவர் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் 31-சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் 52-சான்று ஆவனம் மற்றும் சான்று பொருட்கள் ஆகியவை குறியீடு செயப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பானது இன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில், குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 3-ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி செல்வம் தீர்ப்பு அளித்தார்.
