இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 285 பேர் கைதாகி விடுதலை

விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு மானியம் வழங்காத மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட நேற்று கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கூடினர்.
அங்கிருந்து கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு தாலுகா செயலாளர் ஜி. பாபு, நகரச் செயலாளர் சரோஜா ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை கோவில்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவானந்த், வனசுந்தர் மற்றும் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து குரல் எழுப்பியபடி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். ஆண்களும் , பெண்களும் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இப்போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பி. கரும்பன், மாவட்ட நிர்வாக குழு சேதுராமலிங்கம், பரமராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி, அலாவுதீன், மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி உட்பட 285 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 215 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
