தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு போட்டி; கனிமொழி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுப் போட்டி இன்று(8.9.23). தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. போட்டியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் செந்தில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்,.
இந்த போட்டிகளில் 16 -மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 130-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். வெற்றி பெறும் வீரர்கள் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச கடல் சாகச போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த கடல் சாகச விளையாட்டு போட்டிகள் கடலில் 7 கிலோமீட்டர் தூரம் வரை படகில் சென்று திரும்பி வரும் வகையில் நடைபெறுகிறது. நின்று கொண்டே துடுப்பு செய்யக்கூடிய போட்டி மற்றும் அமர்ந்திருந்து துடுப்பு செய்யக்கூடிய போட்டி என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படுகின்றது.
போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்தோனேசியாவில் பட்டாயா நகரில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கும் பின்னர் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிக்கும் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேஷ், அரியானா, டில்லி ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், சட்டிஸ்கர், உள்ளிட்ட 13 -மாநிலங்கள் மற்றும் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய எல்லை பாதுகாப்பு படை ஆகிய இடங்களில் இருந்து பங்கேற்கின்றனர்.
வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக தங்க பதக்கம் மற்றும் 10-ஆயிரம் ரூபாய் பரிசும், இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கம் 7-ஆயிரம் ரூபாய் பரிசும், மூன்றாவது பரிசாக வெண்கல பதக்கம் மற்றும் 5-ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
