பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிவஞானபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி செல்வராதா (வயது 59). இவர் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 18-ந்தேதி அன்று பணிக்கு சென்று விட்டு தூத்துக்குடியில் இருந்து பஸ்சில் எப்போதும்வென்றானுக்கு வந்தார். அங்கு அவரை இளங்கோவன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
எப்போதும்வென்றான் ஏழு கண் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென்று செல்வராதாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த மாரிகுமார் மகன் ஆனந்த் என்ற அசோக் (30), அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலிகருப்பன் விக்ரம் என்ற விக்கி (23) ஆகிய இருவரையும் எப்போதும்வென்றான் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து இவர்கள் மீது ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த ஓட்டப்பிடாரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட அந்த 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு சார்பில் வக்கீல் முருகேசன் ஆஜரானார்.
