கோவில்பட்டி பேருந்து நிலையங்கள் இடையே சர்க்குலர் பஸ் போக்குவரத்து ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை மனு
கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் இடையே சர்க்குலர் பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி நகர குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர் தினேஷ், கிளைச் செயலாளர்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சென்று இருந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்வதற்கு இயக்கப்பட்டு வந்த சர்க்குலர் பஸ் ஆனது இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் சர்க்குலர் பஸ் இயக்கப்பட வேண்டும் மற்றும் கோவில்பட்டியில் முக்கியமாக மக்கள் செல்லும் பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.