அமலாக்க துறை சோதனைக்கு தி.மு. க. பயப்படுவது ஏன்? டி. ஜெயக்குமார் கேள்வி

சென்னை அண்ணாநகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை சிதறடிக்க பா.ஜ.க.முயற்சி செய்துவருகிறது என்று ஸ்டாலின் பேசியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து டி. ஜெயக்குமார் கூறியதாவது :-
நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையை எங்கள் மீது ஏவி விடுகிறீர்கள்.பொய் வழக்குப் போடுகிறீர்கள்.நாங்கள் இப்படிதான் புலம்பி வருகிறோமா.?,
எளியாரை வலியார் அடித்தால்,வலியாரை தெய்வம் அடிக்கும்.இன்றைக்கு பொன்முடி வழக்கு என்ன ஆனது.திமுகவைச் சார்ந்தவர்களே அரசு வழக்கறிஞர்கள். எப்படி வழக்கு நடக்கும்.
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் எந்த வழக்குப் போட்டாலும் பயப்படமாட்டோம். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். எதையும் நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று சொல்லும் தைரியம்,துணிச்சல் தி.மு.க.வுக்கு உண்டா.இல்லை.உடனே அதற்கு அரசியல் சாயம் பூசுவார்கள். உடனே இந்திய அளவில் உள்ள கட்சித் தலைவர்களிடம் பேசுவது.அதுபோல தற்போது பயத்தினுடைய வெளிப்பாடு,பயத்தின் உச்சத்தின் காரணமாக அமலாக்கத்துறை எங்களை அரசியல் ரீதியாகப் பழிவாங்குகிறது என்று பேசுகிறார்கள்.
அரசியலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு அரசியலா.இரண்டு மாதத்திற்கும் நீங்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தது. அதன் அடிப்படையில்தானே அனைத்தும் நடக்கிறது.இதில் அரசியல் எங்கிருந்து வந்தது. அவர்களுக்கு மடியில் கனம் உள்ளது.அதனால் பயம் உள்ளது. செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரையில் அந்த மவுன சாமியார் இப்போதுதான் வாயைத் திறந்திருக்கிறார். எத்தனை பேர் உருளப்போகிறார்களே.யூ அண்ட் க்யூ என்பதுபோலத்தான் நிலைமை வரும்.
என்று தணியும் இந்த ஜாதி வெறி என்பதுபோல தற்போது ஆகிவிட்டது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் வளரும் பிஞ்சுகள் மனதிலே சாதியத்தை வளரவிடும் போக்கு என்பது மிகவும் கவலைக்குரிய, கண்டத்திற்குரிய விஷயம்.அரசைப் பொறுத்தவரையில் வரும் முன் காக்கும் திராணி இருக்கவேண்டும். அங்கு இருக்கும் உளவுத்துறை என்ன செய்துகொண்டுள்ளது.மூன்று நாட்களுக்கு முன்னரே தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் காவல்துறையிடம் தெரிவிக்கவேண்டும். இந்த விடியா ஆட்சியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நிர்வாகமே அப்படி இருக்கும்போது விளைவு இப்படி உள்ளது.
நீட்டை பொறுத்தவரையில் எங்களுக்குத்தான் சூட்சமம் தெரியும் என்று சொன்னது யாரு. திமுகதான் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது, இதனை முதல் கையெழுத்தாகப் போடவேண்டுமல்லவா.கையெழுத்தும் போடவில்லை.சூட்சமத்தையும் சொல்லவில்லை. ஆளுநர் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார்.38 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.மத்திய அரசிடம் என்ன அழுத்தத்தைக் கொடுத்தீர்கள்.
எங்கள் நிலைப்பாடு நீட் தேவையில்லை என்பதுதான்.எங்கள் ஆட்சியில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டு,பல முறை பிரதமரை நானும்,எடப்பாடியாரும் சந்திக்கும்போது அழுத்தம் அளித்துள்ளோம்.கண்டிப்பாக எங்கள் மாநிலத்திற்கு விதி விலக்கு அளியுங்கள் என்று கேட்டோம். அம்மா அவர்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி பெற்றதுபோல ஏதாவது ஒரு வகையில் எங்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
38 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் என்ன செய்தீர்கள். 17 வருடம் இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது கல்வியை மாநில பட்டியலில் மாற்றியிருந்தால் இந்த நிலைமை இன்றைக்கு வந்திருக்குமா. நீட்டை கொண்டுவந்ததே காங்கிரஸ் ஆட்சியில்தானே. திமுகவைச் சேர்ந்த அமைச்சர்தானே இதற்கான மசோதாவைப் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். உங்களுக்குத்தான் சூட்சமம் தெரியுமே இதனைத் தெரிவித்துவிட்டு போகவேண்டியதுதானே.நீட்டை பொறுத்தவரையில் தொடர்ந்து மத்திய அரசிடம் அழுத்தம் தர திமுக அரசு தவறிவிட்டது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
