தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன குடோனில் ரூ.3.20 லட்சம் முந்திரிபருப்பு கொள்ளை வழக்கில் 5 பேர் கைது

தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்த பால்ராஜ் (வயது 48) என்பவர் முந்திரிபருப்புகளை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவர் திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலை பகுதியில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அதில் முந்திரிபருப்பு மூட்டைகளை இருப்பு வைப்பது வழக்கம்.
கடந்த 7ம் தேதி இரவு இந்த குடோனுக்கு வந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி குடோன் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர், பின்னர் இருந்த 40 முந்திரிபருப்பு மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
.விசாரணையில் தூத்துக்குடி பெரியசாமி நகர் பாலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன்கள் அழகர் (27), மணிகண்டன் (32), வேலுசாமி மகன் மாரிமுத்து (20), பிரையண்ட் நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் சுரேஷ் (20) மற்றும் முத்தையாபுரம் சுந்தர்நகரை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் அஜித்குமார் (26) ஆகியோர் முந்திரிபருப்பு மூட்டைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து ரூ.3லட்சத்து 20ஆயிரம் மதிப்புள்ள 3 டன் 200 கிலோ முந்திரிபருப்பு மூட்டைகள் மற்றும் கொள்ளையடித்து செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
