தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது: ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.ஆனார்

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதால், அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்தது.
இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை மக்களவை செயலகம் இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும், பதவி நீக்கம் செய்யும்போது காட்டிய வேகத்தை மத்திய அரசு திரும்ப பெறும் விவகாரத்தில் காட்டவில்லை என்று விமர்சித்தன.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆகியுள்ளார். இதனால், இன்று தொடங்கிய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். நாடாளுமன்றம் வந்த ராகுல்காந்தியை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்று முழக்கங்களை எழுப்பினர். எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்களவையில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
