கோவில்பட்டி கம்பன் கழக ஆண்டு விழா; கருத்தரங்கு, பட்டிமன்றம் என கோலாகலம்

கோவில்பட்டி கம்பன் கழக 2-ஆம் ஆண்டு விழா கதிரேசன் கோயில் சாலையில் உள்ள ஆர்ததி மஹாலில் 2 நாட்கள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு கம்பன் கழக நிறுவனர் எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த பொ.முருகன், ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் கோமதி, காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை மணிமதி, கம்பன் கழகத் தலைவர் லட்சுமணப்பெருமாள், நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் நாராயணசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். தொடர்ந்து, `கம்பன் தமிழில் காவிய மயில்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இலக்கிய சுடர் த. ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

நாடக மயில் என்ற தலைப்பில் வீரபாலாஜி, மலைக் குல மயில் என்ற தலைப்பில் பாரதி, மயன் குல மயில் என்ற தலைப்பில் அறிவொளி ஆகியோர் பேசினர். கம்பன் கழக துணைத் தலைவர் பெரியசாமிபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சுனையரசன், இணை செயலர் மதிவாணன், நிர்வாகக் குழு உறுப்பினர் விநாயகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2-ம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவில்பட்டி வட்டாரத்திற்கு உள்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற மாறுவேட போட்டி , செய்யுள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, இசைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தொழிலதிபர் வி.எஸ்.பாபு தலைமை தாங்கினார்.
டாக்டர் டி.செல்வராஜ், கடம்பூர் இந்து நாடார்கள் மேல்நிலைப் பள்ளி செயலர் ராம்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர்கள் கோமதி, லதா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றது.
கம்பனின் சுவைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இளையோர் அரங்கம் நிகழ்ச்சிக்கு பேச்சாளர் ப.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.. அழுகை என்ற தலைப்பில் ராஜதர்ஷினி, வியப்பு என்ற தலைப்பில் சுபத்ரா, வீரம் என்ற தலைப்பில் வெங்கடேஷ், சினம் என்ற தலைப்பில் தீபக், உவகை என்ற தலைப்பில் ஸ்ரீநிதி ஆகியோர் பேசினர்.
=மாலையில் கம்பனின் புகழுக்கு பெரிதும் காரணம் கற்பனை சிறப்பே, பாத்திர படைப்பே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்ற நடுவராக மாது செயல்பட்டார். கற்பனை சிறப்பே என்ற தலைப்பில் க.முருகேசன், சீ.விமல், ரெ.ராஜ்குமார், பாத்திர படைப்பே என்ற தலைப்பில் மா.சிதம்பரம், ஜோதி ரவி கு.பாஸ்கர் ஆகியோர் பேசினர்.
டாக்டர் சீனிவாசன், கம்பன் கழக துணைத் தலைவர் ராஜாமணி, தொழிலதிபர் சி.பெரியசாமிபாண்டியன், கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் சுனையரசன், இணை செயலர் மதிவாணன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், மனோகர், ராதா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கம்பன் கழக பொருளாளர் வினோத் கண்ணன் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை கழக செயலர் சரவணச்செல்வன் தலைமையில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
