ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றிக்கோப்பைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

சென்னையில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கோப்பை , வீரர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் வந்த ஆசிய வெற்றிகோப்பைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கபட்டது. இதற்கான நிகழச்சி கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆக்கி மைதானத்தில் நேற்று (23.7.2023) நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதாஜீவன், வரவேற்று பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடையே அறிமுகப்படுத்தினார்.
பின்னர் பாஸ் தி பால் – கோப்பை (PASS THE BALL TROPHY TOUR) சுற்றுப்பயணத்தை வழியனுப்பி வைத்தார். அப்போது கூடியிருந்தவர்கள் கரகோஷம் செய்தனர். முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் விழா மேடையில் ஆக்கி மட்டையால் பந்தை அடித்து விளையாடினர்.

விழாவில் கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் , கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜெயா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சு.அந்தோணி அதிஷ்டராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆக்கிக் கழக செயலாளர் சி.குருசித்ர சண்முகபாரதி, இந்திய ஆக்கி வீரர்.ச.மாரீஸ்வரன், அரசு அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
