கோவில்பட்டி அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா

உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.

.சிறப்புமிக்க ஆடிப்பூர வளைகாப்பு விழா கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. வளைகாப்பு விழாவிற்கான வளையல், மஞ்சள் கயிறு மற்றும் மஞ்சள் கிழங்கு, பச்சப்பயறு வாங்கி கொடுத்து பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று செல்ல வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் அழைப்பு விடுத்து இருந்தனர்.
அதன்படி பக்தர்கள் வளையல், மஞ்சள் கயிறு போன்றவற்றை வாங்கி காணிக்கையாக கொடுத்தனர். ஆடிப்பூர சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த வளையல்களை அம்மனுக்கு சாற்றி தீப ஆராதனை நடந்தது. பின்னர் மங்கள பிரசாதமாக வளையல்கள் வழங்கப்பட்டன. அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துகொண்டால், சுகப்பிரசவம் நிகழும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்ற நம்பிக்கை நிலவுவதால் பெண்கள் அம்மனுக்கு படைத்த வளையல்களை வாங்கி சென்றனர்.
முத்துமாரியம்மன் கோவில்
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைப்பெற்றது தொடர்ந்து மாலை 6 மணிக்கு வளைகாப்பு விழா கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை சீர்வரிசை தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதணை நடைபெற்றது.

பிறகு 11 சீர்வரிசை தட்டுகள் கோவில் வளாகத்தை சுற்றி வந்து அம்பாள் சன்னதியில் வளைகாப்பும் சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார்.
கோயில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன்,நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் ,சரடு வளையல் அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
