மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்: அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 13-ம்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது. அப்போது அவரது இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த மாதம் 21-ம்தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வருகிற 26-ம்தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார். ஆம்புலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
