அ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன்,சசிகலாவுக்கு மன்னிப்பு கடிதம் பொருந்தாது; டி ஜெயக்குமார் பேட்டி

சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அவர் கூறுகையில். “கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் ஒரு வரலாற்றை உருவாக்கும் வகையில் ,இது வரை தமிழகமே கண்டிராத வகையில் ஒரு எழுச்சியாக மாநாடு நடைபெறுகின்ற நிலையில் நமது அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில்,கழகத்தை எந்த கொம்பானாலும் அசைக்க முடியா ஒரு இரும்பு கோட்டை என்ற வகையில் இந்த மாநாட்டிற்கு அலை அலையாய்,குடும்பம் குடும்பமாக வரவேண்டும் என்ற வகையில் இன்றைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது” என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
அமளிப்பூங்கா
கேள்வி :- முதலமைச்சர் தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று முதல்வர் பேசியுள்ளாரே
பதில் :- தமிழ்நாடு அமைதி பூங்கா இல்லை. அமளிப் பூங்காவாக உள்ளது. அம்மாவின் காலத்திலும் சரி.புரட்சித்தலைவர் காலத்திலும் சரி,எடப்பாடியார் ஆட்சியிலும் தமிழகம் ஒரு அமைதி பூங்காவாக திகழ்ந்தது. ஒரு சாரசரி மனிதன் விரும்புவது என்ன. நிம்மதியான அமைதியான வாழ்க்கை. நிம்மதியான அமைதியான வாழ்க்கை எங்களுடைய கழக ஆட்சியிலே உறுதிப்படுத்தப்பட்டது. காந்தி குறிப்பிட்டதுபோல ஒரு பெண் தன்னந்தனியாக இரவு நேரத்தில் நகைகளை அணிந்துகொண்டு சுதந்திரமாகச் செல்லக்கூடிய நிலை என்றால் அது கழக ஆட்சியில்தான் இருந்தது.ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாக உள்ளது. பெட்ரோல் குண்டுகள் கலாச்சாரங்கள் இன்றைக்கு தலை தூக்கியுள்ளது. இத்தனைக்கும் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கடலூர் ஐயப்பன் அவர் திருமணத்திற்குச் செல்லும்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.ஐஸ்ட் மிஸ் ஆகிவிட்டார். இல்லை என்றால் அவர் பெட்ரோல் குண்டுக்குப் பலியாகியிருப்பார். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதே இன்றைக்கு பெட்ரோல் குண்டு வீசுகின்ற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்றால் சாதாரண குடிமக்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்..
கேள்வி : நேற்று கட்சியிலிருந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் அளித்துவிட்டு மீண்டும் சேரலாம் என்ற அழைப்பு அளிக்கப்பட்டிருந்தது.இது சசிகலாவுக்கும் பொருந்துமா
பதில் : அம்மா காலத்தில் இருக்கும் வழக்கமான நடைமுறைதான் இது.பொதுச்செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் அளித்தார் அதனை அவர் முடிவு செய்வார். ஆனால் அந்த கடிதம் மூன்று பேருக்குப் பொருந்தாது. ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி தினகரன்,சசிகலா இவர்களுக்குப் பொருந்தாது. மற்ற அனைவருக்கும் பொருந்தும்.ஆனால் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார்.
கேள்வி:- செந்தில்பாலாஜியின் நீதிமன்ற நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- நீதிமன்ற வழக்கு குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் அதே நேரத்தில் உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும்.தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கவேண்டும். அந்த வகையில் சீட்டிங்,பிராடு 30 கோடிக் கணக்கு வழக்கு எல்லாம் மேற்படி நபருக்குத்தான் தெரியும் என்ற வகையிலே தகவல் அமலாக்கத்துறைக்குப் போய்விட்டு அதன் அடிப்படையில் அதனைத் தோண்ட ஆரம்பித்து பல பேர் மாட்டுவார்கள் என்ற அடிப்படையில் அவரை அமைச்சர் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து இன்றைக்கு அரசு இயங்கிவருகிறது. எலுமிச்சையை முடி மறைக்க முடியும்.பூசணிக்காயை மூடி மறைக்க முடியும்.இமாலய ஊழல் புரிந்தவர்களை மூடி மறைக்க முடியுமா. அமைச்சர் என்ற கவசத்தை வைத்து மூடி மறைக்க முடியுமா. அவரை நீக்கவேண்டும் என்றுதான் எங்கள் கருத்து.ஆளுநரிடம் மனு அளித்தோம். போராட்டம் செய்தோம்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் வழக்குத் தொடுத்துள்ளார். அவருக்குத் தண்ட செலவு செய்துவருகிறார்கள். மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
கேள்வி :-ஓ.பன்னீர்செல்வம் மாநாடு குறித்து
பதில் :- அவரை பொறுத்தவரை தி.மு.க.வின் கைக்கூலி. பொம்மலாட்டம் என்பார்கள்.அந்த பொம்மலாட்ட நூலை தி.மு.க. பிடித்துள்ளது. அவர் எப்படி வேண்டுமானாலும் தலையாட்டி வருவார். கழகத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்வார்கள்.அதனால் எந்த களங்கத்தையும் ஏற்படுத்த முடியாது. கட்சியை இதுபோன்ற செயல்களால் வீழ்த்த முடியாது.
.
கேள்வி :- பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கியுள்ளதே
பதில் :- அதனால் என்ன இப்போது.தமிழக மக்கள் தேர்தல் எப்போது வரும் என்று கொதித்துபோயியுள்ளார்கள். அவர்கள் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்று வேண்டி வருகிறார்கள்.அவ்வளவு கொடுமை இப்போது நடந்துவருகிறது. விளம்பரத்தை வைத்து பிம்பத்தைக் காட்டிவருகிறார் ஸ்டாலின். இன்றைக்கு தக்காளியை உங்களால் கண்ணால் பார்க்க முடிகிறதா. சின்ன வெங்காயம் கூட சாப்பிட முடியவில்லை.இஞ்சியும் விலை கூடி விட்டது. இஞ்சி இல்லாத ஒரு சமையல்,தக்காளி இல்லாத ஒரு சமையல்,சின்ன வெங்காயம் இல்லாத ஒரு சமையல் என்று அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சமைப்பது குறித்து ஒரு துறையை ஏற்படுத்தப் போகிறார்கள். எவ்வளவு கேவலமாக உள்ளார்கள். விலை ஏற்றத்தைத் தடுக்க அம்மா காலத்தில் நடவடிக்கை எடுத்தோம். விலை ஏற்றத்தின் போது அந்த அமைப்பின் மூலம் பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு அந்த பொருட்களைக் குறைந்த விலையில் அளித்தோம். ஆனால் இவர்கள் டாஸ்மாக் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்கள்.இது தேவையா. கடையை மூடுகிறேன் என்று 300 கடையைத் திறந்துள்ளார்கள்..இன்றைக்கு 10 ரூபாய் வசூல் செய்துகொண்டுதான் உள்ளார்கள். அமைச்சர் முத்துசாமி எங்களிடம் இருந்தபோது நன்றாக இருந்தார்,அங்கு சென்றவுடன் எப்படி மாறிவிட்டார் பாருங்கள். அரசியலில் மூத்தவர் அவரை சாராயம் விற்க அனுப்பியுள்ளார்கள் என்பதுதான் வருத்தமாக உள்ளது. சரக்குக்கு – அவர் ஒரு ஆய்வுக்கூட்டம் போடுகிறார்.அவர் ஒரு மாடலை உருவாக்குகிறார்.
கேள்வி : -நேற்று திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்களே
பதில் : தி.மு.க.வில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. எரிமலை எப்போது வெடிக்கும் என்பதுபோல உள்ள குமுறல் உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 9 மாதங்கள் உள்ளது.எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கண்டிப்பாக பல கட்சிகள் அங்கிருந்து இங்கு வரும் வாய்ப்பு உள்ளது. தோற்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.வெற்றி பெறும் எங்களோடுதான் வருவார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
