கோவில்பட்டி அருகே சாலை மறியல்; போலீஸ் தடியடி

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 313-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாத செலுத்தினார்கள்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானவர்கள் வேன், கார்கள் மற்றும் இரு சக்கர வாகங்களில் கட்டாலங்குலம் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர், மதுரையில் இருந்து வாகனங்களில் வந்த ஒரு குழுவினர் மணி மண்டபம் செல்லும் வழியிலுள்ள நினைவு வளைவில் சமுதாய கொடியை கட்டி வைத்தனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து வைத்து விசாரித்தனர்,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன் வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பரவேஸ் குமார், தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காரணமாக நான்குவழி சாலையில் இருபுறமும் சுமார் 5 கி.மீ.தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டார், ஆனாலும் மறியல் நீடித்தது. சாலை மறியல் செய்தவர்கள் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது. அதி விரைவு படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்,.
