தி.மு.க. ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து, உருவபடத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் அளித்த பேட்டி வருமாறு
மாவீரன் அழகு முத்துகோன் இந்திய சுதந்திரத்திற்காக வித்திட்டவர். அழகு முத்துக்குமார் வீரத்தை பரிசாக்கும் வகையில், அவருக்கு சிலை அமைத்தது அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தான்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வருகின்ற 18 ஆம் தேதி கூட்டணியில் அவர் பங்கு பெறுவார் என தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி கொடி மற்றும் சின்னம் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் சொந்தமானது.
இனிமேல் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது போர்ஜரி ஆகும். அதற்காக சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடநாடு கொலை, கொள்ளை நடந்தவுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது அம்மாவின் அரசு. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இடையில் கொரோனா நோய் தொற்று வந்ததன் காரணமாக சுமார் ஒரு வருடமாக நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கு தாமதமானது.
இருந்தாலும், சாட்சிகள் விசாரிக்கப்பட்டு சி.ஆர்.பி.சி 313 போடப்பட்டது. பிறகு ஆர்கியுமென்ட் நடத்தப்பட்டு, தீர்ப்பு வழங்கக்கூடிய நிலையில் இருந்தது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் இப்போதைய முதல்வரின் ஆணைப்படி மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. தலைமையில் வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றது. அவர் தான் மேற்கொண்ட அறிக்கையினை நீலகிரி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் 90 சதவீதம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கை உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏ.எஸ்.பி) அந்தஸ்திலுள்ள ஒரு அதிகாரி விசாரித்து வருகிறார்.
மேற்கு மண்டல ஐ.ஜி 90 சதவீதம் இந்த வழக்கை விசாரித்து முடிக்கக்கூடிய சூழ்நிலையில், ஏன் அவரை விட குறைந்த பதவியிலுள்ள ஏ.எஸ்.பி நிலையில் உள்ள அதிகாரிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது? இதனுடைய மர்மம் என்ன?
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குற்றவாளிகள் கேரள மாநிலத்தில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு, இவர்கள் மீது குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு கேரள நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த குற்றவாளிகள் கொலை, கொள்ளை, திருட்டு, ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற கொடுங்குற்றம் புரிந்தவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளார்கள். அதை முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இக்குற்றவாளிகளுக்கு திமுக-வைச் சேர்ந்தவர்கள் ஜாமின்தாரர்களாக இருந்துள்ளார்கள். இவர்களுக்கும், திமுக-விற்கும் என்ன சம்பந்தம்?
ஆகவேதான் இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பேசினார்.
குற்றவாளிகளுக்கு ஜாமின்தாரர்களாக இருந்த தி.மு.க.வினரும், முதல்வரும் உள்ள போட்டோ வெளிவந்துள்ளது. தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் சாமுவேல் ஊடகங்களில் தவறான செய்தியினை பரப்புகிறார் என்று அப்போதைய முதலமைச்சராக இருந்து எடப்பாடியார் , சாமுவேல் மீது உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது குறித்து பேசக்கூடாது என்று நீதிமன்ற ஆணை உள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் தங்கியிருந்த ஓட்டலில் அவர்கள் எவ்வாறு இந்த குற்றச் சம்பவங்களை செய்தார்கள் என்பதை பேசிக் கொண்டிருந்த நிகழ்வு வளைதளங்களில் வெளிவந்தன. இது பெரும்பாலான ஊடகங்களில் வெளிவந்தது.
குற்றம் சாட்டப்பட்ட சயன், அவரது மனைவி மற்றும் தனது குழந்தையுடன் காரில் கேரளா சென்று கொண்டிருந்தபோது நடைபெற்ற விபத்தில் சயனின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். சயன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது ஒரு விபத்து என்று கேரளா காவல்துறை பதிவு செய்தது.
சயன் மற்றும் மனோஜிற்காக ஆஜரான தி.மு.க. வழக்கறிஞர்கள் ராஜ் திலக், மற்றும். பிரபாகரன். ராஜ் திலக் தற்போது அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜ் திலக் வழக்கறிஞராக ஆஜரான மூத்த வழக்கறிஞர். என்.ஆர். இளங்கோ, தற்போது அவர் தி,மு,க.வின் ராஜ்யசபா எம்.பி, ஊட்டியில் கோடநாடு வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் ஒருவர் ஆனந்தன். அவர் முன்னாள் தி.மு.க. ஆட்சியில் அரசு வழக்கறிஞர்
சயன் மற்றும் மனோஜ் இருவருக்கும் ஜாமீன் கொடுக்கும்போது தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆஜராகி ஜாமீன் ஏற்பாடு செய்து கொடுக்கும் நிலையில் இந்த குற்றவாளிகளுக்கும் ஜாமீன்தாரர்களுக்கும் என்ன தொடர்பு? ஸ்டாலினுடன் ஜாமீன்தாரர்கள் போட்டோ எடுத்துள்ளனர். இதுவரை ஜாமீன்தாரர்கள் எந்த நிலையிலும் விசாரிக்கப்படவிலலை.
மேலும் இந்த குற்றங்களை செய்தவர்கள் கொடுங்குற்றவாளிகள். எனவே அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கிறோம் என்று போட்டோ எடுத்து இன்றைக்கு அவர்களோடு இருக்கிறார்கள் என்றால் இந்த செய்தியை பொறுத்தவரை ஊடங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு இன்றைக்கு இந்த அரசு திட்டமிட்டு செயல்படுகிறது.
எனவே அதற்கு உறுதுணையாகத்தான் இந்த ஓ.பி.எஸ். தரப்பும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. அதே போல் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளையெல்லாம் எதிர்கட்சித் தலைவர், பத்திரிகைகளில் வந்ததை சட்டமன்றத்திலே வெளிப்படுத்தியபோது, பத்திரிகை செய்திகளையெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்கள்.
ஆனால் தற்போது தெஹல்காவில் வந்த செய்தியை மட்டும் எடுத்துக்கொண்டு எப்படி விசாரணை செய்ய முடியும்? எனவே இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்கின்ற வேலை என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள். அதிகாரம் இருக்கிறது என்று தி.மு.க. ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. காலம் மாறும். கழக ஆட்சி மலரும். அப்போது தி.மு.க.வின் அராஜகம், கொலை குற்றங்கள் கண்டிப்பாக விசாரிக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும்.
கேள்வி: டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி மது .,விற்பனை செய்யப்படும் என்கிறார்களே?
பதில்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா ஆகியோர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் முத்துசாமி. சேராத இடத்தில் சேர்ந்து குழம்பி போய் உள்ளார். காலை 7 மணிக்கு கடையை திறந்து 9 மணிக்கு முடுவோம் என்கிறார்கள். இதனால் காலையிலே மதுவை குடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலையை இவர்களே உருவாக்குகிறார்கள். இதற்கு அனைத்து தரப்பிடமிருந்து கோரிக்கை வந்தது என்கிறார்கள். டெட்ரா பேக்கில் மது விற்கப்படும் என்கிறார்கள். இப்படி வாங்கப்படும் மதுவினை யாராது தங்களது வீட்டிலுள்ள பிரிஜ்ஜில் வைக்கும்போது குழந்தைகள் ஏதோ குளிர்பானம் என்றுதானே நினைப்பார்கள். இது ஒரு விபரீதமான வேலை அல்லவா? எனவே கலப்படத்தை ஒத்துக்கொண்ட இவர்கள் ஒரு மாற்றத்தினை சிந்தித்தால் நல்லது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
