கோவில்பட்டி ஜில்விலாஸ் சோடா கம்பெனி உரிமையாளர் காலமானார்

கோவில்பட்டி தெற்கு பஜாரில்
செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுக்கு அருகே சாலையின் தொடக்கத்தில் ஜில் விலாஸ் சோடா கலர் கம்பெனி உள்ளது.
மிகவும் பிரபலமான, பழமையான இந்த சோடா கலர் கம்பெனிதொடங்கி 80 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.
பொதுவாக, அக்காலங்களில், குளிர்பானம் என்பது வசதி படைத்தவர்களின் சோம பானம் போல கருதப்பட்டது. மற்றவர்கள் ருசிக்க குச்சி ஐஸ், பால் ஐஸ்,சேமியா ஐஸ் போன்றவை தான்.
கோவில்பட்டியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களுள் ஒன்று சித்திரை தீர்த்த திருவிழா. அந்த திருவிழாவில், பக்கத்து கிராமங்களில் இருந்து கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவார்கள். அப்போது, ஜில் விலாஸ் குளிர்பானம் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கினால் விசிறி இலவசமாக கொடுப்பார்கள்.
இதற்காகவே பெரும்பாலான மக்கள் ஜில்விலாஸ் நிறுவனத்தின், நன்னாரி சர்பத், ஆரஞ்ச் ஜூஸ், பஞ்சாட்சரம் போன்ற குளிர்பானங்களை குடித்து விட்டு, அதற்கு இலவசமாய் தரும் அட்டை விசிறியை வீசியபடியே வீதிகளில் உலா வருவார்கள். இந்த அனுபவம் பலருக்கும் இருக்கும்.
கடை வாசலில், எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் மூவரும் சேர்ந்தாற்போல இருக்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருக்கும்.
ஆண்டுகள் நகர உடலுக்கு கேடு விளைவிக்கும் பன்னாட்டு குளிர் பானங்களுக்கு மத்தியில், சவால் விட்டபடி இன்னமும், கோவில்பட்டியில் இயங்கும் ஜிலவிலாஸ் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிறது.

இத்தனை பெருமை மிக்க ஜில்விலாஸ் கம்பெனியின் உரிமையாளர் எஸ். வி. கே. ராஜகோபால் வயது முதிர்ச்சி காரணமாக இன்று மதியம் காலமானார்.
தெற்கு பஜாரில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. முக்கிய பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.நாளை 9ந்தேதி ஞாயிறு பிற்பகல் இறுதி சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
