திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
விமான நிலையத்தில் அதிமுகவினர் திரண்டுவந்து வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து காரில் திருச்செந்தூர் சென்றார்,. அங்கு பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் சுவாமி மூலவர், சண்முகர், சத்ருசம்கார மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டம் வருவதையொட்டி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருச்செந்தூரில் மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்கானி, பழைய காயல் முத்தையாபுரம், தூத்துக்குடி 3-ம் மைல் பைபாஸ் மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.
