பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு தேர்வான ஓட்டப்பிடாரம் வீரர்; கனிமொழியிடம் வாழ்த்து பெற்றார்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கே.துரைசாமிபுரம் ஊராட்சியை சேர்ந்த மகாராஜா(வயது 24) என்பவர் பார்வையற்றோருக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 27-ந்தேதி வரை இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காம் நகரில் நடைபெறும் சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு (IBSA) உலக விளையாட்டு 2023 இல் பங்கேற்கிறார்.
மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, எத்திலப்ப நாயக்கன்பட்டியில் நடைபெற்ற “மக்கள் களம்” நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.யை பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர் மகாராஜா சந்தித்தார். இந்திய அணியின் 17 வீரர்களில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அவருக்கு கனிமொழி எம்.பி பாராட்டு தெரிவித்தார். மேலும் அவரிடம், “நீங்கள் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தங்கி பயிற்சி எடுத்து வருகிறீர்கள், தங்களை தான் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்” என்று கூறிய கனிமொழி கிரிக்கெட் வீரர் மகாராஜாவுக்கு ஊக்கத் தொகை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
மகாராஜா அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது கலெக்டர் செந்தில்ராஜ் உடன் இருந்தார்.
