கனிமொழி எம்.பி.பயணம் செய்த பஸ்சின் பெண் டிரைவர் பணிவிலகல்
கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கோவையின் முதல் பெண் டிரைவர் என்ற பெருமையை பெற்றிருந்த ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் டிரைவர் ஷர்மிளா பிரபலமாகி வந்தார்.
இந்த நிலையில் தி.மு.க.துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி.இன்று கோவை பயணம் மேற்கொண்டார். அப்போது ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை அந்த பஸ்சில் பயணம் செய்தார்.
பயணத்தின்போது டிரைவர் இருக்கையின் இடது புற இருக்கையில் அமர்ந்து இருந்த கனிமொழி எம்.பி., டிரைவர் ஷர்மிளா பஸ் ஓட்டிசெல்வதை ரசித்தார். மேலும் ஷர்மிளாவிற்கு கை கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
திமுக எம்.பி கனிமொழி சந்திப்பு குறித்து பேசிய பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, “பேருந்து ஓட்டும் போது அவருடன் அதிகமாக பேச முடியாததால் பீளமேட்டில் இறங்கி தன்னுடன் பேசினார். என்ன உதவி வேண்டுமானாலும் தாங்கள் செய்து தருவதாகவும் கனிமொழி மேடம் தெரிவித்தார். தன்னை கட்டி அணைத்து பரிசு அளித்தார். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறினார்
கனிமொழியின் பஸ் பயணம் முடிந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் பெண் டிரைவர் ஷர்மிளாவை , பஸ்உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி பயணித்தபோது பயணச்சீட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக டிரைவர் ஷர்மிளாவுடன் தனியார் பஸ் உரிமையாளர் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஷர்மிளா ராஜினாமா செய்து விட்டு பணியில் இருந்து விலகி உள்ளார்,
இது குறித்து ஷர்மிளா கூறுகையில்”, “நான் விளம்பரத்திற்காக பஸ்சில் ஆட்களை ஏற்றுவதாக பேருந்தின் உரிமையாளர் பேசியது வேதனை அளிக்கிறது. தி.மு.க. எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பயணச்சீட்டு எடுத்துதான் பஸ்சில் பயணித்தனர். கனிமொழி யுடன் வந்தவர்களிடம் கண்டக்டர் கடுமையாக நடந்ததை நான் கண்டித்தேன்” என தெரிவித்தார்.