கோவில்பட்டியில் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் புகைப்பட கண்காட்சி நாளை தொடக்கம்; கனிமொழி, கீதாஜீவன் பங்கேற்கிறார்கள்
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக ” அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை ” என்ற தலைப்பில் 4 நாள் புகைப்படக் கண்காட்சி நாளை 20.6.2023 தேதி முதல் 23.6.2023 தேதி வரை கோவில்பட்டி மேட்டுக் காளியம்மன் கோவில் அருகில் அமைந்திருக்கும் கம்மவார் டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. காலை 10.30 மணி அளவில் கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜு , நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, மத்திய மக்கள் தொடர்பக மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகங்களின் கூடுதல் தலைமை இயக்குனர் எம். அண்ணாதுரை மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.
நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் சார்பாக வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் ஆகியவை இடம்பெறும் .
இக்கண்காட்சியில் தபால்துறை, ஐ.சி.டி.எஸ்., காசநோய் தடுப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. நாள்தோறும் காலை மாலை என இரு அமர்வுகள் நடைபெறும். ஒவ்வொரு அமர்விலும் பல்வேறு துறைசார் வல்லுனர்களின் கருத்துரை, கலைநிகழ்ச்சிகளும் மற்றும் பங்குபெறும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்வும் இடம் பெறுகிறது.
யோகா, வங்கி சார் கல்வியறிவு, திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு, உணவுப்பாதுகாப்பு, வான்வெளி அறிவியல், சிறு குறுந்தொழில்கள், இந்திய ரெயில்வே, போஸ்ட் இந்தியா பேமென்ட் பேங்க் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புகைப்பட கண்காண்ட்சி 23.6.2023 மாலை நிறைவு பெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியினை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.
மேற்கண்ட தகவலை கள விளம்பர அலுவலர் பி. கோபகுமார் தெரிவித்து உள்ளார்.