பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்க செயற்குழுவில் தீர்மானம்
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கோவில்பட்டி ரேவா பிளாசா கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் சுடலை வரவேற்றார்.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் சேக்கிழார், பொருளாளர் பாஸ்டின் ராஜ், சங்க நிர்வாகிகள் முத்தையா, முருகானந்தம், சுப்பிரமணியன், கோபால், ராஜாங்கம் மற்றும் பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
- 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மருத்துவ செலவுக்கான தொகையை வழங்க வேண்டும்.
- குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரம் வழங்குவதில் காலதாமதம் செய்வதை தடுத்திட வேண்டும்
கூட்ட முடிவில் சுப்பாராஜ் நன்றி கூறினார்.