• June 8, 2025

இளநிலை மருத்துவப் படிப்பில் பொது கவுன்சிலிங்: மத்திய அரசின் அறிவிப்புக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு  

 இளநிலை மருத்துவப் படிப்பில் பொது கவுன்சிலிங்: மத்திய அரசின் அறிவிப்புக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு  

அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள்; இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் தமிழ் நாடு. 2011-ல் விடியா தி.மு.க. ஆட்சியில் 1,945 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள், 2021-ல் அம்மாவின் ஆட்சியில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களையும் சேர்த்து சுமார் 12,500-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது சாதனையாகும்.

அம்மாவின் அரசு ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று அதன்மூலம் 1,650 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்களை கூடுதலாகப் பெற்று சாதனை படைத்தது. இதைக்கூட இந்த விடியா தி.மு.க. அரசு தக்க வைத்துக்கொள்ள இயலாமல் தடுமாறிக்கொண்டிருப்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். மருத்துவத் துறையிலும், மருத்துவக் கல்வியிலும், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

மாண்புமிகு அம்மா கொண்டு வந்த 69 சதவீத இட ஒதுக்கீடு, அம்மாவின் வழியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் சமூக சமத்துவம் தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிலைநாட்டப்பட்டுள்ளது.

கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழகக் காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில், மாநில சுயாட்சி என்ற கொள்கையில் நாம் உறுதியாக இருக்கிறோம். எந்த நிலையிலும் தமிழ் நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற எந்த சட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரித்ததில்லை.

நாடாளுமன்றத்தில் தேசிய மருத்துவக் குழுமம் சட்ட மசோதாவை கொண்டுவந்தபோதே கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் பொது கவுன்சிலிங் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல. இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் தற்போதுள்ள நடைமுறையிலேயே எம்.பி.பி.எஸ் மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தேசிய மருத்துவக் குழுமத்தை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *