அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டனக்குரல்
![அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டனக்குரல்](https://tn96news.com/wp-content/uploads/2023/06/ANNAAMALI.jpg)
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க.பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து உள்ளனர். மேலும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்,.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர்.
மேலும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. தலைமைக்கு வலியுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து பரிசீலனை செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டம் முடிந்ததும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)