• June 8, 2025

தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும் பணி நாளை தொடக்கம்

 தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும் பணி நாளை தொடக்கம்

தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை பெருவிழா நடந்து வருகிறது. இறுதி நாளான ஆகஸ்ட் 5-ந் தேதி நகர வீதிகளில் தூய பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

 முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடைபெறுவது வழக்கம்.  அதன்படி பேராலய வரலாற்றில் இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்து உள்ளது. இந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து  பல கோடி ரூபாய் மதிப்பில் தங்கத்தேர் வடிவமைக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. தங்கத் தேர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் வீற்றிருக்கும் பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும் பணி நாளை (11-ம் தேதி) தொடங்குகிறது. 

இதையொட்டி நேற்று (9-ந் தேதி) மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசுவதற்காக சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பீடத்தில் இருந்து சொரூபம் இறக்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் 11-ந் தேதி தங்க முலாம் பூசுவதற்காக அன்னையின் சொரூபம் அருகில் உள்ள தஸ்நேவிஸ் மாதா பெண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கன்னியர் மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து தங்க முலாம் பூசும் பணிகள் சுமார் 10 நாட்கள் நடைபெற உள்ளது. 

இந்த பணி முடிந்து திருச்சொரூபம் வைக்கப்படும். இதனை முன்னிட்டு நாளை பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்கி, திருப்பலி நிறைவேற்றி தங்க முலாம் பூசும் பணியை தொடங்கி வைக்கிறார். இதில் ஆயர்கள், அருட்தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *