டாக்டர் மைத்ரேயன், மீண்டும் பா.ஜனதாவில் இணைந்தார்

புற்றுநோய் டாக்டரான மைத்ரேயன் 1999ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன்பிறகு டாக்டர் மைத்ரேயன், மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.
ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார்..
கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினார். அதன் பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றார்.
இதனால் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்.பி. மைத்ரேயனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க.பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் டாக்டர் மைத்ரேயன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்..
