தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை மாற்ற மேலிடம் முடிவு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அண்மையில் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தற்போது கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நியமிக்கப்பட்டார். கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட்டால் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய தலைவர் பதவிக்கு டாக்டர் செல்லக்குமார் எம்.பி. பெயர் அடிபடுகிறது. மேலும் ஜோதிமணி எம்.பி.யும் போட்டியில் இருக்கிறார்.
