நில அபகரிப்பு புகார்: டி.ஜெயக்குமார் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கின் நிராகரிப்பு மனு தள்ளுபடி

 நில அபகரிப்பு புகார்: டி.ஜெயக்குமார் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கின் நிராகரிப்பு மனு தள்ளுபடி

சென்னை துரைப்பாக்கத்தில் மீன்வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும் அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் டி.ஜெயக்குமார்,அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இது தொடர்பான செய்தி வெளியாகி தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டதற்காக ரூ.1 கோடி மானநஷ்டஈடு வழங்கக்கோரியும், தன்னை பற்றி அவதூறு கருத்து வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மகேசுக்கு எதிராக டி.ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை ஏற்க கூடாது என்று மகேஷ் தரப்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க மகேசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

 இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயக்குமார் தரப்பில் மூத்த வக்கீல் அரவிந்த் சுப்பிரமணியன் ஆஜராகி, கடந்த 2016 ம் ஆண்டில் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் பழி வாங்கும் நோக்கத்துடன் உள்ளதால் மான நஷ்ட ஈடு தரக்கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மகேஷ் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.

புகார்தாரரான மகேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், கடந்த 2016 ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் அவர் மீது புகார் அளிக்க இயலவில்லை என்பதால் கடந்த ஆண்டு புகார் அளித்த தாகவும், மீடியாக்களில் ஜெயக்குமார் தான் பேட்டி அளித்து வருவதாக தெரிவித்தார்.’

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மகேஷின் நிராகரிப்பு மனு மீதான உத்தரவை நீதிபதி குமரேஷ் பாபு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து மகேசுக்கு எதிராக டி.ஜெயக்குமார் தொடர்ந்துள்ள ,மானநஷ்ட ஈடு வழக்கு விசாரணை  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *