கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்

‘மலைகளின் இளவரசி~ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை சார்பில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார்.. திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கோடை விழாவை தொடங்கி வைத்து பேசினார்.. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர் கண்காட்சியையும், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலைநிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தனர்,
அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான சமயமூர்த்தி, சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப்நந்தூரி உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மலர் கண்காட்சிக்காக 3 கட்டங்களாக பிரையண்ட் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அதில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காட்டெருமை, ஒட்டகச்சிவிங்கி, வாத்து உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன..
கோடை விழாவில் முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சியும், 8 நாட்கள் கோடை விழாவும் நடக்கிறது. அப்போது சுற்றுலாத்துறை மூலம் மங்கள இசை, பரதநாட்டியம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு இசை, ஆடல்-பாடல், பலகுரல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் 28-ந்தேதி பட்டிமன்றமும், 30-ந்தேதி படகு போட்டியும், 31-ந்தேதி கால்நடைத்துறை மூலம் நாய்கள் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.
