கோவில்பட்டி புதுக்கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றலில் பாரபட்சமா? டீக்கடையை இழந்த பெண் ஆவேசம்

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தின் மெயின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று மாலை நகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் மகேஸ்வரி என்பவர் நடத்தி வந்த டீ கடையை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தினை கொண்டு இடித்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நகராட்சி அதிகாரிகள் கூறியதால் சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பொருள்களை அகற்றி விட்டதாகவும், முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தனது கடையை மட்டும் நகராட்சி அதிகாரிகள் வேண்டும் என்றே இடித்து விட்டதாக கூறி மகேஸ்வரி கண்ணீருடன் சாலையில் பொருள்களை எடுத்து போட்டு, பெஞ்சில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் இடிக்கப்பட்ட கடைக்கு ஓடி சென்று செங்கலை எடுத்து எறிந்தது மட்டுமின்றி தன்னுடைய கடை இடிக்கப்பட்ட ஆத்திரத்தில் நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து ஆவேசத்துடன் குரல் எழுப்பினார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மகேஸ்வரிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானம் செய்ய முற்பட்டனர். ஆனாலும் மகேஸ்வரி தனது ஆவேசத்தை குறைக்கவில்லை, ஆக்கிரமிப்பை அகற்ற 6 மாதம் ஆகும் என்று கவுன்சிலர்கள் கூறிவிட்டு தற்போது தனது கடையை இடித்து ஏன் ? என்று அடுத்தடுத்து கேள்வி கேட்டார்.

காவல்துறையினருடன் அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சற்று ஆவேசம் குறைந்த மகேஸ்வரின தனது போராட்டத்தை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமின்றி பரபரப்பும் ஏற்பட்டது.
எவ்வித பாரபட்சம் இல்லமால் அனைத்து ஆக்கிரமிப்புகளும் எடுக்கப்படும் , ஏற்கனவே இது குறித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே முறையாக தெரிவித்து விட்டு கால அவகாசம் கொடுத்து தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாக நகராட்சி தரப்பில் தெரிவித்தனர்
