அகில இந்திய ஆக்கி: கோவில்பட்டி அணி வீரர்களின் அபார ஆட்டம்; 6 கோல் அடித்து சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணியை வீழ்த்தினர்

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. 3வது லீக் ஆட்டத்தில் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணியுடன் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி மோதியது.
உள்ளூர் ரசிகர்கள் கைதட்டல் ஆரவாரத்துடன் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியினர் களம் இறங்கினர். ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் நிஷி தேவ அருள் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

32-வது நிமிடத்தில் அதே அணி வீரர் தினேஷ் குமார் பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டு அணிக்கு வலு சேர்த்தார்,
37-வது நிமிடத்தில் மேலும் வலு சேர்க்கும் வகையில் மனோஜ் குமார் ஒரு பீல்டு கோல் போட்டார். அடுத்து 42-வது நிமிடத்தில் தினேஷ் குமார் பெனாலிட்டி கார்னர் முறையில் ,மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து 4 கோல்கள் வாங்கிய சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணி மிரண்டு போனது. பின்னர் அவர்கள் கடுமையாக போராடி 48-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் குமன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். இதை தொடர்ந்து அந்த அணி உற்சாகம் அடைந்தது, 52-வது நிமிடத்தில் குமன் பெனாலிட்டி கார்னர் முறையில் இன்னொரு கோல் அடித்தார்.

இதனால் ஸ்கோர் 4-2 என்ற நிலையில் 55-வது நிமிடத்தில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் மனோஜ் குமார் ஒரு கோல் போட்டார். 59-வது நிமிடத்தில் முஹம்மது யாஸீன் ஒரு கோல் அடித்தார். இதனால் 6:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.
ஆல்பர்ட் ஜான் மற்றும் பிரைஜு ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
சிறந்த ஆட்டக்காரராக கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி, வீரர் மனோஜ் குமார், தேர்வு செய்யப்பட்டார்.
