• June 8, 2025

அமளி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 அமளி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று அளித்த பேட்டி வருமாறு

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவும், மு.க.ஸ்டாலின் தந்தையுமான  கருணாநிதியால் இரண்டு ஆண்டுகளில் சம்பாதிக்க முடியாத ரூ 30 ஆயிரம் கோடியை  இவர்கள் சம்பாதித்து விட்டார்கள் என்று அவர்களுடன் இருந்தவரே இன்றைக்கு சொல்லிவிட்டார்.

மேலும் இது சம்பந்தமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை  அமைச்சரிடம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார்.  மேலும் அந்த 30 ஆயிரம் கோடி ரூபாயை பதுக்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி  தலைமையில் பேரணியாகச் சென்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது.

கேள்வி: ஓபிஎஸ் தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்கிறாரே?

பதில்: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கூடாது என்று அன்றைக்கு மெரினாவில் பொதுமக்கள் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள்.

மேலும் அம்மாவின் அரசு இதற்கான முழு வீச்சில் செயல்பட்டது. பொதுமக்களின் ஒருமித்த போராட்டத்தினை அன்றைக்க மத்திய அரசு  கவனத்தில்  கொண்டது. ஆனால் அதேசமயம்  முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்., ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தினத்தில் பங்கேற்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதாவது குடியரசு தினத்தில் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இந்த போராட்டம் காரணமாக அந்த நிகழ்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது. அதனால் அன்றைக்கு அந்தப் போராட்டக்காரர்களை காவல்துறையைக் கொண்டு ஒடுக்கியதோடு    நடுக்குப்பம் உட்பட மீனவ மக்கள் தாக்குதலுக்கு ஆளாயினர்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மையிலே மக்களுடைய போராட்டம் மற்றும் கழக அரசின் தொடர் சட்ட முயற்சி மற்றும் சட்டப் போராட்டமும் தான் ஜல்லிக்கட்டு மீதான தடை உத்தரவு நீங்கியது. மற்றபடி இவர் ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்லிக் கொள்வதில் எந்த பொருத்தமும் கிடையாது. ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது காவல்துறை மூலம் தாக்குதல் நடத்தினார். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கழக ஆட்சியில் அண்ணன் எடப்பாடியார் வழங்கினார். அதன் பிறகு பொதுச் செயலாளர் எடப்பாடியார் சட்டவழிமுறைகளை பின்பற்றி அதற்கான தடை உத்தரவினை வாங்கினார். எனவே ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்லுவது முற்றிலும் தவறு.

கேள்வி: நாடாளுமன்ற தேர்தல் வெற்றி எப்படி இருக்கும்?

பதில்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா, ஆள் கடத்தல், பாலியல் பலாத்காரம், கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை என்று உள்ளது. முன்பெல்லாம் பைக்கில் வந்துதான் திருடன் ஜெயினை பறிப்பான். இப்போதெல்லாம் காரிலே வந்து செயினை பறிக்கின்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கழக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு அமளி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது.

தி.மு.க. ஆட்சியில் மக்கள் வேதனையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.  கடலில் பேனா வைக்கிறேன் என்று ஊதாரித்தனமான திட்டங்களை கழக அரசு கொண்டுவரவில்லை. கழக ஆட்சியில் இதயதெய்வம் அம்மா அவர்கள் மக்களின் மனநிலையை உள்ளுணர்வோடு புரிந்துகொண்டு நலத்திட்டங்களை கொண்டுவந்தார்கள். பிளஸ் படித்த பெண்ணுக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் 1 சவரன் நகையும், பட்டப்படிப்பு படித்த பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் 1 சவரன் நகையும் வழங்கினார்கள். இது சுமார் 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை வருகிறது. கழக ஆட்சியில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்றனர். கிட்டத்தட்ட ஏழரை டன் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  இப்படி சிறப்பான இந்த திட்டத்தை விடியா தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

மேலும் மாணவர்களின் நலன் கருதி தொலைநோக்கு திட்டத்தோடு அம்மா அவர்கள் மடிக்கணினி திட்டத்தை கொண்டுவந்தார்கள். தற்போது அந்த திட்டத்தையும் நிறுத்திவிட்டார்கள். அதே போல் ஏழை மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகத்தை மூடிவிட்டார்கள். கொரோனா காலகட்டத்தில் எல்லோருக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை படிப்படியாக மூடிக்கொண்டு வருகிறார்கள். கழக ஆட்சியில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு எண்ணெய் மற்றும் புளி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கொடுப்பதில்லை. பிறகு எப்படி உணவு தரமானதாக இருக்கும். அம்மா உணவகத்தை முற்றிலுமாக மூட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஏதாவது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்றால் அதுவும் இல்லை. எங்கு பார்த்தாலும் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்கள் நடைபெறுகின்றன.  தற்போது கால்நடை மருத்துவர்கள¢ கோரிக்கைகளை முன்வைத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் 12,600 ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதியம் கொண்டுவருவதாக சொன்னார்கள். ஆனால் செய்யவில்லை. மேலும் தற்போது கைத்தறி நெசவாளர், மீனவர்கள் என்று எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் வெடிக்கின்றன. எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி என்பது அமாவாசைதான்.

கேள்வி: கள்ளச்சாராயம் விற்றவருக்கு நிவாரணத் தொகை அறிவித்துவிட்டு பிறகு ரத்து செய்தது குறித்து?

பதில்: நாட்டிலே என்ன நடவடிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை. சமீபத்தில்தான் ஒரு மாற்றுத்தினாளி முதலமைச்சரையும், அமைச்சரையும் ஏமாற்றினார். அதன் பிறகும் இப்படி கள்ளச்சாராயம் விற்றவருக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க உத்தரவிட்டு அதன் பின்பு அதனை ரத்து செய்துள்ளார்கள். அதே சமயம் மற்றொரு கருத்தும் தோன்றுகிறது. அதாவது எதிர்பாராதவிதமாக மின்சார கசிவு, யானை தாக்கி என எதிர்பாராத விபத்துகளில் மரணமடைவர்களுக்கு 10 லட்சம்  வழங்கலாமே? இதற்கெல்லாம் கொடுக்காமல். கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம்  ரூபாய் கொடுத்துள்ளார்கள். இதற்கு காரணம் என்ன? இவர்கள் செய்கின்ற தவறு வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தானே இந்த 10 லட்சம் ரூபாய் நிதியுதவி.

இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆளும்கட்சித்தான் காரணமாக இருக்கிறது. உதாரணத்திற்கு திண்டிவனத்தில் உள்ள தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா கள்ளச்சாராயம் விற்றதனால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மருவூர் ராஜாவிற்கு தி.மு.க.வைச் சேர்ந்த செஞ்சி மஸ்தான்  கேக் ஊட்டி விடுவதுபோல் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த மருவூர் ராஜா எவ்வளவு நாள் கள்ளச்சாராயம் காய்ச்சியிருப்பார். இதனை முன்கூட்டி கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தியிருந்தால் இன்றைக்கு கள்ளச்சாராயத்தால்  22 பேர் மரணமடைந்திருக்க மாட்டார்கள். சட்டமன்ற கூட்ட தொடரில் கொள்கை விளக்க குறிப்பில் அஇஅதிமுக அரசின் செயல்பாட்டினை பாராட்டினார்கள். அதே நேரம் கடந்த 8 ஆண்டுகளில்  சட்டம் ஒழுங்கு பேணி காப்பதில் கழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிடவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசின் அவல நிலையையும் வெளிப்படுத்தவில்லை.

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் மரணம் நடைபெற்றது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளாரே?

பதில்:  உண்மையிலே அமைச்சர் செந்தில்பாலாஜி நிதானத்தில்தான் பேசுகிறாரா என்பதனை ப்ரீத் பரிசோதனை கருவி மூலம் பரிசோதிக்க வேண்டும். கழக ஆட்சி டாஸ்மாக் கடைகள் மூடியபோது  கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிந்த நிலையில் வேறு வழியின்றி சானிட்டரிசை குடித்தார். இதனால் மரணம் ஏற்பட்டது. ஆனால் தற்போது கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்துள்ளனர். இதனை திசை திருப்பதற்காக சானிட்டரிசை குடித்ததை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

கேள்வி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தும் என்கிறார்களே?

பதில்: சி.பி.சி.ஐ.டி. யாரிடம் இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். இவங்க என்ன ரிப்போர்ட் கொடுக்கிறார்களோ அதைதான் தெரிவிப்பார்கள். கடந்த 2 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கை தீவிரப்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இருந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெடும்போது சர்வாதிகாரியாக மாறுவேன் என்றார். இதை கேட்டால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. கழக ஆட்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.,  புர¢ட்சித்தலைவி அம்மா ஆகியோர் நீதி தவறாமல் நடந்துகொண்டார்கள். அதனால்தான் நாடு அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு நாடு மிகவும் சீர்கெட்டுள்ளது.

அமைச்சர் பதவியை பறித்த பின்பு ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கலாம். ஆனால் உதயநிதிக்கு யார் ஜால்ரா தட்டுகிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது உதயநிதியின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த அன்பில்பொய்யாமொழியைப் போன்று உதயநிதியின் மற்றொரு ரசிகர்மன்ற ரசிகருக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த இரண்டு பேருக்குத்தான் போட்டி இருக்கும். இப்படி இருக்கும்போது தமிழ்நாட்டு மக்களின் நலனில் இவர்கள்  எப்படி அக்கறை செலுத்துவார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *