தமிழகம் போதைபொருள் விற்பனை சந்தையாக மாறிவிட்டது- கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி.காலனியில் உள்ள ஸ்ரீ அம்மச்சியார் திருக்கோவில் திருவிழாவினை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது :-
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் போதை விற்பனை செய்யும் சந்தையாக (மாநிலமாக) மாறி விட்டது.சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானியக்கோரிக்கையில் இது குறித்து புள்ளி விபரங்களுடன் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்தார்.வயது வித்தியாசம் இல்லாமல் பள்ளி மாணவர்கள் வரை போதை பழக்கத்திற்கு உள்ளாகும் மோசமான புதிய காலச்சாரம் உருவாகி வருகிறது.

அரசு விழிப்புணர்வுடன் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.ஆனால் அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சப்பைக்கட்டு கட்டி சமாளித்தார். வழக்கு பதிந்துள்ளதாக கூறினார் தவிர எதையும் நிறுத்தியதாக இல்லை. கள்ளச்சாரயத்தினால் உயிரிழப்பு என்பது 1980க்கு பிறகு இன்றைக்குதான் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் 30 ஆண்டுகளாக இல்லாத நிலை இன்றைக்கு ஏற்பட்டு 20 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இனியும் எத்தனை பேர் பலியாவர்கள் என்று தெரியவில்லை. கள்ளச்சாரயத்தினால் இன்றைக்கு 20 குடும்பங்கள் நிற்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று அரசு ராஜினாமா செய்து இருக்க வேண்டும், முதல்வர் பொறுப்பில் தான் காவல்துறை உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் அதிகமாக இருந்த நிலையில் இன்றைக்கு கள்ளச்சாரயமும் வந்து மக்களை பலிகொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் முதல்வர் பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்து இருக்க வேண்டும்,
அமைதிபூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு நாள்தோறும் தீவிரவாதம், வன்முறை,கொலை, கொள்ளை, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை இப்படி போன்ற சம்பவங்கள் சிந்து பாத் கதை போல தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகம் அபாயத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
கொள்ளை சம்பவம் என்பது அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டது. காவல்துறை செயல்படுகிறதா என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் மீது பயமும், மரியாதையும் இல்லை மக்களிடத்தில் என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை. முதல்வர் நிழல் முதல்வராக உள்ளார். முதல்வரின் நிழல்களாக 2, 3 முதல்வர்கள் உள்ளனர்.
கள்ளச்சாரயம், போதை வாஸ்துகளை ஒழிக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த அதிமுக மட்டுமல்ல அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
குறிப்பாக ஊடகத்துறையினரும் எடுத்துரைக்க வேண்டும், மக்களிடத்தில் கொண்டு சென்றதால் விழிப்புணர்வு ஏற்படும், மக்கள் பொங்கி எழு வேண்டும், அந்த அளவிற்கு மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது.எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து இன்று ஆறுதல் கூறுகிறார்.
இதற்கு அடுத்து மக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார்.
இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.
