கள்ளசாராய சாவு : மு. க. ஸ்டாலின், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் ; டி. ஜெயக்குமார் பேட்டி

கடலில் பேனா மற்றும் கடலில் காற்றாலை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராயபுரம் புனித சேவியர் தெரு பகுதியில் மீனவர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
கடல்சார் மக்கள் நல சங்கம் மற்றும் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கத்ததில் தமிழ்நாடு முழுவதும் சென்று ஒரு லட்சம் மீனவர்கள் இடம் கையெழுத்து பெற்று ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
கடலோர மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் எழுதாத, ஊழலில் திளைத்த பேனாவை கடலில் எந்த காலத்திலும் வைக்கக்கூடாது. பேனா சின்னம் தேவையில்லை என்கிற வகையில் கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் மீனவர்களிடம் கையெழுத்து பெற்று ஆளுநரிடமும், மத்திய அரசிடமும் வழங்க இருக்கிறார்கள். கடலின் நடுவில் பேனாச்சின்னம் வைக்க மீனவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் விரும்பவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலைதான் இருக்கிறது. திமுகவினரின் குடும்ப பணத்தில்லா பேனா சின்னம் வைக்கிறார்கள். மக்கள் வரியில்தான் கட்டுகிறார்கள். திமுக அறக்கட்டளையின் பணத்தில் அறிவாலத்தில் பேனா சின்னத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
கடலில் பேனா நினைவுச்சின்னம் வைப்பதால் மீன்கள் வரத்து குறையும், மீன் பிடி தொழிலை நம்பி இருக்கும் கிராமங்கள் அழிந்து விடும். கடலில் பேனா நினைவுச் சின்னம் வைக்க இடம் இருக்கிறது. ஆனால் நொச்சி குப்பத்தில் ஆயிரம் வருடமாக மீன் விற்பவர்களுக்கு இடம் இல்லை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டத்தின் போது நாட்களாக அரசுக்கு காது கேட்கவில்லை. நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீனவர்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனையில் போராடிய 4 மீனவர்கள் சிறையில் உள்ளனர். அவர்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
கள்ளச்சாராயம் காரணமாக உயிர் இழப்பு விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது வருமுன் காக்கும் புத்தி இந்த அரசுக்கு இல்லை. மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவதில்லை. சாராய மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இது சாராய மாடல் அரசு. கள்ளச்சாராயம் விற்பது காவல்துறைக்கு தெரியாதா? இதை செய்வதே ஆளும் கட்சி தான். இது ஆளும் கட்சியும், உள்ளூர் காவல்துறையும் கைகோர்த்துதன் விளைவே. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெருவில் நிற்பதற்கு காரணம் திமுக அரசுதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா செய்வதை விட்டுவிட்டு காயத்தை ஏற்படுத்தி விட்டேன் மருந்து தடவ போகிறேன் என முதலமைச்சர் இன்று மரக்காணம் செல்கிறார். நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை சமாளித்து மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இல்லை.
கஞ்சா ஆப்பரேஷன் 2.0 அறிவித்தார்கள். இப்பொழுது பலர் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இப்பொழுது ரைடு செல்கிறார்கள் இதை முன்பே செய்திருக்கலாம். மரணம் ஏற்பட்டால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? இது கையாளாகாத தனத்தை காட்டுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக அமைச்சரிடம் (பொன்முடி) நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பொறுப்பில்லாமல் அமைச்சர் பதிலளித்துள்ளதாகவும், டி டி வி தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு இதை நகைச்சுவையாக தான் பார்க்கிறேன். அம்மா இறக்க வேண்டும் என உள் மனதில் தவம் இருந்தவர் ஓபிஎஸ். சந்தர்ப்பவாதிகள் ஒன்றினைவாதால் எந்த தாக்கமும் ஏற்படாது என்று ஜெயக்குமார் பதில் அளித்தார்.
அதிமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியது தொடர்பான கேள்விக்கு, கூட்டணி குறித்து இபிஎஸ் தெளிவாக கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
