கண்மாய் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேஷ்குமார் (வயது 11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும். இவரது தம்பி அருண்குமார் (7), அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் சுதன் (7) ஆகியோர் அங்குள்ள கண்மாய் பகுதியில் விளையாட சென்றனர்.
இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர். கண்மாய் கரையோரம் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் தகவல் கூறினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கு வந்து பார்த்தபோது கண்மாய் நீரில் மாணவர் அருண் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக கிராமத்து இளைஞர்கள் கண்மாய் தண்ணீரில் இறங்கி தேடினர். இதில், மகேஷ் மற்றும் சுதன் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன. தகவல் அறிந்து அங்கு சென்ற புதூர் காவல் நிலைய போலீசார், 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் சென்று விசாரணை மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையில் கண்மாயில் நீர் வரத்து ஏற்பட்டு தண்ணீர் உள்ளது. இதில், கண்மாய் அருகே விளையாட சென்ற மாணவர்கள், குளிப்பதற்காக இறங்கிய போது மூழ்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
