கோவில்பட்டியில் துணிகரம்: ஒரே நாள் இரவில் 3 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் மேட்டு காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா 8 நாட்கள் நடந்து 2 நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.
நேற்று இரவு 8:30 மணிக்கு பூஜைகளை முடித்து கோயில் நடையை அடைத்துவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருவிழா நிறைவடைந்து 2 நாட்களே ஆவதால் உண்டியலில் அதிகளவு பணம் இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே இக்கோயிலில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலிலும் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பணம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

மேலும் அங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஆயிரத்தென் விநாயகர் கோயிலிலும் கதவு பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது.
3 கோவில்களிலும் உண்டியல் பணம் அதிக அளவில் இருந்திருக்க கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இந்தக் கோயில்களையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸார் கதிரேசன் கோயில் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
