கோவில்பட்டியில் உலக செவிலியர் தின விழா; பிணியாளரின் நலனுக்காக பாடுபட உறுதியேற்பு

கைவிளக்கு ஏந்திய காரிகை என போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே-12ம் தேதியை உலக செவிலியர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செவிலிய பணியின் தரத்தை நிலைக்க செய்யவும்,அர்ப்பணிப்புடன் பணிபுரியவும், செவிலிய பணியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பாடுபடவும்,மருத்துவர் நோயாளிக்கு செய்யும் பணிகளில் அவருக்கு உதவியாக இருப்பதுடன் பிணியாளரின் நலனுக்கு முழுமனதுடன் பாடுபடவும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார் .
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
செவிலியர் கண்காணிப்பாளர் கனகவல்லி அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அகத்தியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு திருக்குறள் புத்தகமும் இனிப்பும் வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் அசோதை, ஜோதி விஜயலட்சுமி,ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, முத்து முருகன்,சீனிவாசன்,கருப்பசாமி, பூல்பாண்டி, கிருஷ்ணசாமி, திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துசாமி, உள்ளிட்ட செவிலியர்கள்,பரிமளா நர்சிங் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி நன்றி கூறினார்.
